கோவை காவல் தெய்வத்தின் திருவிழா: மத நல்லிணக்கத்தினை நிலை நாட்டிய மக்கள்

கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவிலின் தேர் திருவிழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில், தேர் திருவிழாவுக்கு வந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் பாட்டில்களை வழங்கினர்.

இந்த விழாவை முன்னிட்டு மணிக்கூண்டு டவுன்ஹால், ஒப்பனக்கார வீதி, பெரியகடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

இந்த நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஒப்பணக்கார வீதி பகுதியில் உள்ள பள்ளி வாசல் முன்பாக நின்றிருந்த இஸ்லாமியர்கள் தண்ணீர் பாட்டில்களை கொடுத்தனர். மேலும், நேர்த்திக்கடன் செலுத்த தீச்சட்டியுடன் வந்தவர்களுக்கு, அவர்களே குடிநீரை வழங்கினர்.

இதேபோல், டவுன்ஹால் பகுயில் உள்ள உப்புக்கிணறு சந்து அனைத்து வியாபாரிகள் மற்றும் குடியிருப்போர் சங்கம் சார்பில் கோனியம்மன் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மத நல்லிணக்கத்தை உறுதி செய்யும் விதமாக ஆண்டு தோறும் அன்னதானம் வழங்கி வருவதாகவும், தொடர்ந்து 15 ஆண்டுகளாக கோனியம்மன் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவுத்தனர்.