பள்ளி குழந்தைகளுக்கான மல்டிமீடியா & அனிமேஷன் பயிற்சி வகுப்பு துவக்கம்

கோவை கவுண்டம்பாளையம் லீப் பள்ளி மற்றும் ஜே.டி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து குழந்தைகளுக்கான மல்டிமீடியா, 2D & 3D அனிமேஷன், கேமிங் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்த பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டது.

கோவை கவுண்டம்பாளையம் சண்முகா நகர் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் The LEAP Prep பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு மூலமாகவே வாழ்க்கைத் திறன், சுதந்திரம், தன்னம்பிக்கை மற்றும் கற்றலுக்கான ஆர்வத்தை வளர்க்கும் பாடத்திட்டத்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போதையை குழந்தைகளின் கூடுதல் திறனை கவனத்தில் கொண்டு, குழந்தைகளுக்கான நவீன டிஜிட்டல் பயிற்சி வகுப்புகளை துவக்கியது. ஜே.டி நிறுவனத்துடன் இணைந்து துவங்கப்பட்ட இதில், கிம்ப், ஒப்பன் ஷாட், ப்ளெண்டர் என பிரிவுகளாக பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

இதற்கான துவக்க விழாவில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினரும், இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வருமான பொன்னுசாமி தலைமை வகித்தார். ஜே.டி பயிற்சி நிறுவனத்தின் கோவை மண்டல முதன்மை செயல் அதிகாரி சம்ஜித் தனராஜன், தமிழ்நாடு கேம்பிரிட்ஜ் ஆங்கில மைய பயிற்சியாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

சோட்டா சேம்ப் எனும் இத்திட்டத்தை நடிகரும், இயக்குநருமான மாதம்பட்டி ரங்கராஜ் துவக்கி வைத்தார். மல்டிமீடியா, 2D & 3D அனிமேஷன், கேமிங் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் போன்றவற்றில் குழந்தைகளுக்கு கூடுதல் திறனை வளர்க்கும் விதமாக இந்த பயிற்சி வகுப்புகளை துவக்கி உள்ளதாக பள்ளி மற்றும் பயிற்சி மைய நிர்வகிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாகிகள், ராஜகோபால், செல்வராஜ் சண்முகம், முதல்வர் கோமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மல்டிமீடியா & அனிமேஷனை பள்ளி குழந்தைகளுக்கு தமிழகத்திலேயே முதன் முறையாக இங்கு துவங்கி உள்ளது குறிப்பிடதக்கது.