கே.பி.ஆர். கல்வி நிறுவனங்கள் சார்பாக ஒடிசி நாட்டிய விழா

கே.பி.ஆர். கல்வி நிறுவனங்கள் மற்றும் குழும நிறுவனங்களின் சார்பாக இயங்கி வரும் குறிஞ்சி தமிழ் சங்கத்தின் சார்பாக ஒடிசி நாட்டிய விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்கத்தாவின் ஒடிசி நடனத்தின் குரு ஸ்ரீமதி சதாப்தி மல்லிக் குழுவினரின் நடனம் அரங்கேறியது. தமிழகத்தில் கோவையில் இந்த நடன வகைகளை முதன்முதலாக கே.பி.ஆர் நிறுவனங்கள் சார்பில் அரங்கேற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கே.பி.ஆர்.  நிறுவனங்களின் தலைவர் ராமசாமி அவருடைய வழிகாட்டுதலின் பேரில் இந்நிகழ்வு நடைபெற்றது. கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி முதல்வர் அகிலா தலைமையேற்று நடத்தினார். இவ்விழாவில் கே.பி.ஆர்.கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி முதல்வர் பாலுசாமி வாழ்த்துரை வழங்கினார்.

இந்திய பாரம்பரிய நடனங்களில் பரதம், மணிப்புரி, கதகளி, தாண்டியா போன்ற பாரம்பரிய நடன வகைகளில் ஒடிசி ஒரு புகழ்பெற்ற நடன வகை. இந்த ஒடிசி நடனம் அங்க அசைவுகளும் மற்றும் கைகளின் அபிநயங்களுக்கும், ஆடை அலங்காரமும் புகழ்பெற்றது. 

கல்கத்தாவின் ஒடிசி நடனத்தின் குரு ஸ்ரீமதி சதாப்தி மல்லிக் குழுவைச் சேர்ந்த தேபஸ்மிதாகர், இந்திராணி மிஸ்ரா, ஸ்ரீ டன் மொய் சமந்தர், மற்றும் குமாரி இந்துராணி ஆகியோர் ஒடிசி நடனத்தை கல்லூரி கலையரங்கில் நிகழ்த்தினர். இந்த நடன குழுவினர் சிதம்பரம் நாட்டியாஞ்சலிக்கும் தேர்வாகி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.