உடனடி தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் பட்ஜெட் இல்லை

-அர்ஜுன் பிரகாஷ் மாவட்ட தலைவர் சிஐஐ

இன்று மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இந்த பட்ஜெட் குறித்து சிஐஐ (கான்ஃபெடரேசன் ஆஃப் இந்தியன் இண்டஸ்ட்ரி) செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் செய்தியாளர்களை சந்தித்த சிஐஐ மாவட்ட தலைவர் அர்ஜுன் பிரகாஷ் கூறுகையில், இந்த பட்ஜெட்டில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை கவனத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அனைத்து துறைகளுக்கு பயன்படும் விதத்தில் பட்ஜெட் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். புதிய தொழில்நுட்பம் சார்ந்துள்ள தொழில்களுக்கும் புதிதாக தொடங்கப்பட உள்ள தொழில்களுக்கும் பட்ஜெட் பயனளிக்கும் படி உள்ளதாக தெரிவித்த அவர் டிஜிட்டல் சார்ந்த கல்வி, மருத்தும் ஆகியவற்றை ஊக்குவிக்கும் விதமாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளதை வரவேற்ப்பதாகவும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து பாதுகாப்புத்துறையில் உள்நாட்டு கொள்முதல் 58 சதவீதத்தில் இருந்து 68 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதை வரவேற்பதாகவும் தொலைத்தொடர்புக் கட்டமைப்பின் முதலீட்டையும் வரவேற்பதாக கூறினார். மேலும் இந்தியாவிற்கு என தனி டிஜிட்டல் கரன்சி என்ற அறிவிப்பும் வரவேற்கக் கூடியது என தெரிவித்தார்.  கார்பன்-டை-ஆக்சைடு இல்லா தயாரிப்பை ஊக்குவிக்கும் விதமாக அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாகவும் அதே சமயம் இந்த பட்ஜெட் தொலைநோக்கு பார்வையுடன் போடப்பட்டுள்ளது, ஆனால் உடனடி தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக இல்லை என கூறினார். இந்த பட்ஜெட்டை தொலைநோக்கு பார்வையில் பார்க்கும் போது திருப்தி அளிக்கும்படி உள்ளதாகவும் தெரிவித்தார்.