ஒரே பள்ளியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஆசிரியருக்கு விருது

30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய கோவையை சேர்ந்த ஆசிரியரின் சேவையை பாராட்டி ஐ.கே.செவன் உலக சாதனை புத்தகம் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

கோவை குறிச்சி சிட்கோ பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் வில்சன். கோவை சுங்கம் பகுதியில் உள்ள கார்மல் கார்டன் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தில் சிறப்பு வகுப்புகள் எடுத்து வந்துள்ளார்.

ஆசிரியர் துறையில் மூன்று கவுரவ டாக்டர் பட்டங்களையும், 13 சர்வதேச விருதுகள் மற்றும் அமைதிக்கான சர்வதேச தூதுவர் என பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் கல்வித்துறையில் 32 கால இவரது சேவையை பாராட்டி ஐ.கே.செவன் உலக சாதனை புத்தகம் இவருக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளனர். இதற்கான விழா ஆவராம்பாளையம் கோ.இண்டியா அரங்கில் நடைபெற்றது.

இதில் 9 பட்டபடிப்புகளை படித்து கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர் ராபர்ட் வில்சனுக்கு விருது வழங்கப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியர் ராபர்ட் வில்சன், கல்வித்துறை மட்டுமின்றி சமூகத்தில் பல்வேறு சமுதாய பணிகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார். குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக, இலவச மருத்துவ முகாம்கள் நடத்துவது, கல்வியறிவு இல்லாத ஏழை குடும்பத்தினருக்கு இலவச பட்டா கிடைக்க உதவி செய்வது, பல்வேறு துறைகளில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு வாங்கி கொடுப்பது, என சமூக பணிகளை செய்து வருவதாக கூறினார்.

தமக்கு வழங்கிய இது போன்ற விருதுகள், சமூக சேவை பணிகளை செய்ய மேலும் ஊக்கப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.