குடியரசு தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு

குடியரசு தின விழா நெருங்குவதை முன்னிட்டு கோவையில் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் வரும் 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகளின் உடமைகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் ரயில்வே போலீசார் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. ரயில் பயணிகள், இருக்கைகள், சரக்கு பெட்டிகள் உள்ளிட்டவற்றை சோதனை மேற்கொண்டு வருவதுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றும் நபர்கள் குறித்தும் கண்காணித்து வருகின்றனர்.

ரயில்வே போலீசார் கூறுகையில் குடியரசு தினத்தை முன்னிட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே ஸ்டேஷனில் உள்ள கேமராக்கள் வாயிலாக கண்காணிக்கப்படுகிறது. தண்டவாளங்கள் உள்ள பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. குடியரசு தினத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.