உக்கடம் சி.எம்.சி காலனியில் மேம்பால பணிகளுக்காக வீடுகள் இடித்து அகற்றம்

கோவை உக்கடம் – ஆத்துபாலம் இடையே மேம்பாலம் கட்டும் பணிக்காக உக்கடம் சி.எம்.சி காலனி பகுதியில் 40 வீடுகள் மாநகராட்சி அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டது.

கோவை உக்கடம் – ஆத்துப்பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.430 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த மேம்பாலம் கட்டுமான பணிக்காக 4 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இதற்காக உக்கடம் சிஎம்சி காலனியில் கட்டப்பட்டிருந்த 157 வீடுகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இடிக்கப்பட்டது. 2வது கட்டமாக ஆத்துப் பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் ஒப்பணக்கார வீதி செல்வதற்காக இறங்குதளம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சி.எம்.சி காலனி பகுதியில் 100 வீடுகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இடித்து அகற்றப்பட்டது.

இதனிடையே இன்று உதவி நகர திட்டமிடல் அதிகாரி பாபு தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் சி.எம்.சி காலனி பகுதியில் 40 வீடுகளை இடித்து அகற்றினார்.

இந்த பகுதியில் குடியிருந்தவர்களுக்கு புல்லுகாடு பகுதியில் தற்காலிக குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இடிக்கப்பட்ட 40 வீடுகளுக்கு பதிலாக இப்பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.