ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் ‘உலகத் திருக்குறள் மாநாடு – 2022’

ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைத்தார்

கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குறள் மலைச் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை உலகத் திருக்குறள் மாநாடு – 2022 நடைபெற்றது.

இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாநாட்டினை தொடங்கி வைத்து உரையாற்றினார். மேலும் ஆளுநர் “கல்வெட்டில் திருக்குறள் 6” என்ற திருக்குறள் நூலினை வெளியிட்டார். முன்னதாக கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி வரவேற்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் 10 மாணவர்களுக்கு சிறந்த தமிழ் மாணாக்கர் என்ற சான்றிதழ் வழங்கியும், 5 தமிழ் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கியும் கௌரவித்தார்.

மேலும், சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் நீதிபதி கிருபாகரனுக்கு குறள் மலை பெருநீதிப் பெருமகனார் விருது, கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் நல்லா ஜி பழனிசாமிக்கு குறள் மலை வாழ்நாள் சாதனையாளர் விருது, மனுநீதி அறக்கட்டளையின் தலைவர் மனுநீதி மாணிக்கத்திர்க்கு குறள் மலை மனுநீதிச் சோழன் விருது மற்றும் எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனத்தின் தலைவர் மணிமேகலை மோகன்தாஸ்-க்கு குறள் மலை சிறந்த கல்வியாளர் விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நீதிபதி கிருபாகரன் பேசுகையில்: ஒவ்வொரு வீட்டிலும் திருக்குறள் ஒலிக்க வேண்டும் என்றும், இதில் உள்ள நல்ல விஷயங்களை வாழ்க்கைக்கு பயன்படுத்த வேண்டும் எனவும், அனைவரும் இதன் முக்கியத்தினை குழந்தைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும் என கூறினார். திருக்குறள் மூலம் நமது கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும். தமிழின் முக்கியத்தினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். மொழியை வளர்ப்பதன் மூலம் அம்மொழி பேசும் மக்களை வளர்த்தி, நாட்டை முன்னேற்ற முடியும் எனக் கூறினார்

திருக்குறள் உலகிற்கு ஒரு உதாரணம்

விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: நமது தேசம் புண்ணிய பூமி, சான்றோர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், வாழ்ந்த நாடு என குறிப்பிட்டு பேசினார். திருக்குறளில் எவ்வாறு முறையாக வாழ்வது என்பது குறித்து கூறப்பட்டுள்ளது. அதனால் திருக்குறளின் மகிமை பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

நல்ல மனிதராக வாழ திருக்குறளினை தினமும் படித்து, அதை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். அமைதியான வாழ்க்கையை நடத்த திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளது. திருக்குறளில் உள்ள ஒவ்வொரு வரியும் பல நல்ல விஷயங்களை எடுத்துக் கூறுகிறது. ஒவ்வொரு குறளிலும் உள்ள ஏழு வார்த்தைகளையும் உண்மையாக புரிந்து படித்தால் வாழ்க்கையில் எல்லோரும் போற்றும் நிலையை அடைய முடியும் என்று பேசினார்.

மேலும் திருக்குறள் வாழ்க்கையை உயர்த்தும் ஏணியாக உள்ளது என்றும், வாழ்க்கையில் முன்னேற நல்ல செயல்களை பின்பற்றுங்கள் என்றும் திருக்குறள் உலகிற்கு ஒரு உதாரணமாக உள்ளது என்றும் கூறினார்.

மேலும் இம்மாநாட்டில் ‘1330 திருக்குறளையும் மலையிலே கல்வெட்டில் பதித்து திருக்குறள் மலை உருவாக்கப்பட வேண்டும்’, ‘மலையிலே கல்வெட்டில் பதிக்கப்படும் திருக்குறளை உலக நூலாக யுனெஸ்கோ நிறுவனம் அங்கீகரிக்க வேண்டும்’ மற்றும் ‘உலக நூலாக அறிவிக்கப்பட இருக்கும் திருக்குறளை ஐக்கிய நாடுகள் சபை தன் உறுப்பு நாடுகள் அனைத்திலும் பாடத்திட்டமாக திருக்குறளை சேர்க்க ஆவண செய்யவேண்டும்’ போன்ற மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.