டிடிசிபி அப்ரூவல் தடையால் பத்திர பதிவு செய்வதில் சிக்கல் – அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பினர்

தமிழகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வீட்டு மனைகளுக்கான டிடிசிபி அப்ரூவல் திட்டங்களை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ரியல் எஸ்டேட் அபிவிருத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அகில இந்திய ரியல் எஸ்டேட் அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹென்றி கோவையில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்: டிடிசிபி அப்ரூவல் வழங்கப்படுவதை தமிழ்நாடு அரசு திடீரென தடை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், அபிவிருத்தியாளர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதாக தெரிவித்தார். இதனால் குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு மனைகளை பத்திர பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக வீட்டு மனைகளில் வீடுகளை கட்டுவதிலும் பிரச்னைகள் நிலவுவதாகவும் தெரிவித்தார்.

2016ம் ஆண்டிற்கு முன்பே பதிவு பெற்று, 2017ம் ஆண்டிற்கு பிறகு பணம் கட்டி மனைகளை சமீபத்தில் வாங்கியவர்களும், இந்த தடை காரணமாக பிறருக்கு மனைகளை விற்கமுடியாத நிலை உருவாகியுள்ளதாகவும், வங்கி கடன் பெற்று வீடு கட்ட ஒப்படைப்பு செய்வதிலும் சிக்கல்களை சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

இப்பிரச்னைகள் காரணமாக தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமான இழப்பு ஏற்படுவதோடு, பல லட்சம் ரியல் எஸ்டேட் அபிவிருத்தியாளர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடியை சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழக அரசு உடனடியாக இவற்றை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையேல் நீதிமன்றத்தை நாடி தீர்வு காண வேண்டிய நிலைக்கு ரியல் எஸ்டேட் அபிவிருத்தியாளர்கள் தள்ளப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது அச்சங்கத்தின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.