இந்திய அளவில் நான்காவது இடத்தைப் பிடித்த தமிழ்நாடு வேளாண் பல்கலை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2020 ஆம் ஆண்டிற்கான இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக தரவரிசையில் எட்டாவது இடத்தை பெற்றுள்ளது. இந்த பல்கலைக்கழகமானது இந்தியாவில் உள்ள 67 வேளாண் நிறுவனங்களில் எட்டாவது இடத்தையும், தேசிய அளவிலான மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் நான்காவது இடத்தையும், தென்னிந்தியா வேளாண்மைப் பல்கலைக் கழகங்களுக்கிடையே இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது.

மேலும் இது குறித்த பத்திரிக்கை செய்தியில்: பல்கலைக் கழக ஆசிரியர்களின் சீரிய பயிற்சி வகுப்புகள் மூலம் மாணவர்கள் அதிகளவிலான இளநிலை மற்றும் முதுநிலை ஆராய்ச்சி ஊக்கத்தொகை எண்ணிக்கையை பெற்றதன் மூலம் கல்விப் பரிமாணத்தில் அதிக மதிப்பெண் பெற முடிந்தது. இளம் விஞ்ஞானிகளுக்கு பல்வேறு விருதுகளை பெற தீவிர ஊக்குவிப்பு அளிக்கப்பட்டது. மேலும் ஆராய்ச்சியின் மூலம் அதிக காப்புரிமைகளை பெற்றதன் மூலமும் மதிப்பெண்களை அதிகரிக்க முடிந்தது.

வேளாண் விரிவாக்கத்தில் அதிக அளவிலான செயல் விளக்கங்கள், வானொலி உரைகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன. மேலும் இடுபொருள் வணிகர்கள், அரசு சாரா அமைப்பினர் மற்றும் தொழில் நுட்ப நிபுணர்கள் ஆகியோருக்கு அதிகளவிலான பயிற்சிகள் வழங்கியது, அதிக கிசான் அழைப்புகளை உயர்த்தியது, தொழில்நுட்ப விரிவாக்கத்திற்கான கைபேசி ஆலோசனை சேவைகளை வழங்கியது. அதிக அளவிலான காணொளி காட்சிகளை உருவாக்கியதன் மூலமும் அதிக மதிப்பெண்களை பெற முடிந்தது.

அதிக அளவிலான சர்வதேச மாணவர்களை ஈர்த்ததன் மூலமும் மாணவர்களின் பன்முக தன்மையை அதிகரித்து மதிப்பெண்களை கூட்ட முடிந்தது. மேலும் தரவரிசையில் முன்னேற்றத்தை பெறுவதற்காக தொழில்நுட்ப இயக்குநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டங்கள் மூலம் பல்கலைக்கழகம் பின்தங்கிய அளவு கோல்களை ஆராய்ந்து அவற்றை மேம்படுத்துவதற்கான மாற்றங்கள் செய்யப்பட்டன.

இந்த தரவரிசை மூலம் பல்கலைக்கழகம் நிதிகளை ஈர்ப்பதற்காகவும், இன்னும் கூடுதலாக சர்வேதேச மாணவர்கள் சேர்க்கைக்காகவும், கூட்டு ஆராய்ச்சிக்கான கூடுதல் வழிகளுக்காகவும் உலக அரங்கில் தன்நிலையை மேம்படுத்தவும் உதவும். இனிவரும் நாட்களில் பல்கலைக்கழகம் முதல் மூன்று இடங்களில் இடம் பெற முனைப்புடன் செயல்பட்டு உச்சத்தை எட்டும் என்று பல்கலைக்கழக செயல் துணைவேந்தர் கிருட்டிணமூர்த்தி தெரிவித்துள்ளார்.