கோவையின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கலந்தாய்வு: அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் கோவை மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார்.

இதில் கோவை மாவட்டத்திற்கு தேவையான வளர்ச்சி பணிகளுக்கான பட்டியல்களை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஈஸ்வரன் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறும்போது: விமான நிலைய விரிவாக்கப் பணியை தமிழக முதல்வர் வேகப்படுத்தியுள்ளார். கோவையின் வளர்ச்சித் திட்டங்களை நாங்கள் அமைச்சரிடம் மனுவாக கொடுத்துள்ளோம். அமைச்சர் வாக்குறுதி கொடுத்துள்ளார். கடந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் முறைகேடு நடந்துள்ளது. காவல்துறை இதற்காக நடவடிக்கை எடுத்துக் கொண்டு வருகிறது எனக் கூறினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசும் போது :

கோவையின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து 16 பக்க கோரிக்கைகள் என்னிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் தமிழக முதல்வரிடம் ஒப்படைக்கப்படும். அவர் இந்த கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவார்.

அதே போல 300 சாலைகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு நிறுத்தப்பட்டதாக எஸ்.பி வேலுமணி குற்றம்சாட்டி உள்ளார் என்ற கேள்விக்கு: அவை எந்தெந்த சாலைப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. எந்தெந்த சாலைகளுக்கு திட்ட மதிப்பீடு வழங்கப்பட்டது, அதன் வேலை உத்தரவு, வேலை தொடக்கம் ஆகிவற்றின் பட்டியலை தெளிவாக வெளியிடட்டும். நிர்வாக அனுமதி பெறாமல், டெண்டர் விடாமல் தேர்தலுக்காக மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக அந்த சாலை பணிகள் துவங்கப்பட்டது.
நிதி ஆதாரங்கள் இல்லாமல் தொடங்கப்பட்ட பட்டியலை இரண்டு நாட்களுக்குள் வெளியிடட்டும் எனப் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் நா. கார்த்திக், பையா கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி, சி.ஆர்.ராமசந்திரன், டாக்டர் வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.