உடலுக்கும் மனதிற்கும் உடற்பயிற்சி நல்லது

இந்த அவரச உலகில் பணம் சம்பாதித்து குடும்பத்தைக்காப்பாற்ற வேண்டும் என்ற சூழ்நிலையில் நாம் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். குடும்ப தலைவனாக இருப்பவர்கள் அவர்களின் குடும்ப தேவைக்காக தினமும் வேலைக்கு சென்று நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பலரும் உடல் நலத்தில் அக்கறை கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். இதன் காரணமாகவே இளம் வயதிலேயே சர்க்கரை, இதய நோய் பிரச்சனைகளுக்கு ஆளாகின்றன. குறிப்பாக மனா அழுத்த நோயினால் பலர் பாதிக்கப்படுகிறாரகள். எனவே நம்முடைய எதிர்காலம் கருதியும், நிகழ்காலத்தில் எந்தவிதபிரச்சனையும் இன்றி வாழ வேண்டும் என்றால் மன அழுத்தத்திற்கு ஒரே தீர்வாக உள்ள உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என விஞ்ஞான ரீதியாக நிருபிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், உடற்பயிற்சி செய்வது உடல்நலத்துடன் மனநலத்துக்கும் நல்லது என கலிபோர்னியாவில் ஆய்வாளர்கள் ஆய்வில் உறுதியாகியுள்ளது. அமெரிக்காவின் பல்வேறு பகுதியைச்சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களிடம் உடற்பயிற்சியின் முக்கியத்துவம், உடல் ஆரோக்கியம் மற்றும் மனதளவில் எந்தளவிற்கு ஆரோக்கியமாக உள்ளார்கள் என்ற கோணத்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் கொரோனா காலக்கட்டத்தில் அதிகமாக உடற்பயிற்சி செய்தவர்கள், உடற்பயிற்சி செய்யாதவர்களைக்காட்டிலும் குறைவான பதட்டம் மற்றும் மனசோர்வு கொண்டிருக்கிறார்கள் என ஆய்வின் முடிவுகள் தெரியவருகிறது. இதற்கு வீட்டிலேயே முடங்கி இருந்ததாலும், எந்தவித உடல் இயக்கமின்மையும் இல்லாதது தான் மனசோர்விற்கு காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே எந்தவொரு சூழலிலும் உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என்பதால் உடற்பயிற்சி செய்வதைக்கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், நம் உடல் நலத்திற்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறமோ? அந்தளவிற்கு மன ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதால் தினமும் உடற்பயிற்சியை நாம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மேற்கொள்ளவதால் மன ஆரோக்கியமாக இருப்பதோடு உடலில் உள்ள தேவையற்ற கலோரிகளை கரைக்க உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உடற்பயிசி உதவியாக உள்ளது. இதற்காக எந்தவொரு உடற்பயிற்சிக் கூடங்களுக்கும் நீங்கள் செல்லத்தேவையில்லை எனவும் நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி, தியானம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். இதுபோன்ற நடைமுறைகளை தினமும் அரை மணி நேரமாவது மேற்கொண்டால் நிச்சயம் உடலும், உள்ளமும் உறுதிபெறும்.

பலர் உடல் எடையைக் குறைக்கவேண்டும் என்பதற்காக தங்களுடையப் பணிகளையெல்லாம் முடித்துவிட்டு மாலை நேரங்களில்  சிலர் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் காலை நேரத்தில் தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும். குறிப்பாக வெறும் வயிற்றில் எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் போது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு விரைவில் கரையும். ஒரு வேளை உங்களால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்றால், நீங்கள் அன்றாடம் செய்யும் வேலைகளை உங்கள் உடல் நலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளுங்கள். குறிப்பாக அருகில் உள்ள கடைகளுக்கு சென்றால் பைக் உபயோகிக்காமல் நடந்து செல்வது, லிப்ட் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது போன்ற பல வழிகளை அனைவரும் பின்பற்றலாம்.