“கோவையில் விடுபட்டுள்ள அனைவருக்கும் முதியோர் தொகை வழங்கப்படும்” 

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பொண்ணையராஜபுரம் மாரண்ண கவுண்டர் ஆரம்பப் பள்ளியில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெறும் மக்கள் சபை நிகழ்ச்சி அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்டத்தில், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 150 இடங்களில் மக்கள் சபை கூட்டம் நடைபெறுகிறது எனவும், இந்தக் கூட்டங்களில் துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.

நேற்று ஒரே நாளில் மட்டும் கோவை மாநகராட்சியின் 6 வார்டுகளில் நடைபெற்ற மக்கள் சபை கூட்டங்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெரும்பாலான மனுக்களில் முதியோர் உதவித்தொகை பெற விண்ணப்பித்துள்ளதாகவும், இந்த மனுக்கள் மீது முன்னுரிமை அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கோவையில் பொதுமக்கள் மற்றும் வணிகர் சங்கங்கள் அடிப்படை கட்டமைப்பு குறித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளதாக கூறிய அமைச்சர், அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள 5 மாதங்களில் வழங்கப்பட்டுள்ள 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றியுள்ளார் எனவும் அதேபோல தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல மாதாந்திர மின் கட்டண கணக்கீட்டு திட்டமும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் 234 தொகுதிகளையும் தனது தொகுதிகளாக எண்ணி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், மின்சாரத் துறையில் உள்ள 56 ஆயிரம் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்‌.