சீன போன்களை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்த மத்திய அரசு!

இந்தியா ஒரே நாளில் டிக்டாக், கேம் ஸ்கேனர், ஷேர் சேட் போன்ற 220 செயலிகளுக்கு தடை விதித்தது. அதே போல் இப்போது சீன ஸ்மார்ட் ஃபோன்களை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.

பாதுகாப்பு காரணங்களுக்காகவே இதனை மேற்கொள்வதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சீன ஸ்மார்ட் ஃபோன்களில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள் குறித்தும் டேட்டா குறித்து இந்திய அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விவோ, ஓப்போ, ஒன்பிளஸ், சியோமி ஃபோன் நிறுவனங்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்திய ஸ்மார்ட் ஃபோன் சந்தையில் 50%க்கும் மேல் இந்த 4 ஃபோன்கள் தான் விற்பனை செய்யப்படுகின்றன. இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் ஃபோன்களில் மட்டும் சில உதிரிபாகங்களின் பயன்பாடு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. முதல் நோட்டீஸுக்கு சம்பந்தப்பட்ட 4 நிறுவனங்களும் அனுப்பும் பதிலைப் பொருத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பாயும் எனத் தெரிகிறது. மேலும், இந்த நான்கு நிறுவனங்களின் ஸ்மார்ட் ஃபோன்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தும் எனத் தெரிகிறது.

சீன செயலிகளுக்கு கடந்தாண்டு இந்திய அரசு தடை விதித்ததையடுத்து தனது ஸ்மார்ட் ஃபோன்கள் விற்பனையை சீனா இந்தியாவில் விஸ்தரித்தது. குறிப்பாக விவோ, ஓப்போ, ஒன்பிளஸ், சியோமி ஃபோன் நிறுவனங்கள் இங்கு பல தொழிற்சாலைகளை நிறுவி உற்பத்தியைப் பெருக்கின. ஓப்போ, விவோ போன்ற நிறுவனங்கள் பெருமளவில் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன.

சீன தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஹூவேய்,  ZTE ஆகியனவையும் இந்திய அரசின் சந்தேகப் பார்வையில் விழுந்துள்ளனர்.  இந்த நிறுவனங்களின் ஹார்டுவேர், சாஃப்ட்வேர் குறித்து இந்தியா ஆய்வு செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.