10 ஆண்டுகளுக்குப் பிறகு புத்துயிர்: காந்தியின் அஸ்தி கலச நினைவுத்தூண்

கோவை பேரூர் காஞ்சிமா நதிக்கரையில் மகாத்மா காந்தி, காமராஜர், லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோரின்  அஸ்தி கலசம் வைக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து காமராஜரின் அஸ்தியும், டெல்லியிலிருந்து காந்தி, ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர்களின் அஸ்திகளும் கொண்டு வரப்பட்டு கோவையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

முன்னாள் எம்.எல்.ஏ. எல். எம். நாயுடு தலைமையில் மேற்கொண்ட முயற்சியில் ஆண்டுதோறும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளை முன்னிட்டு, சர்வோதயா தினமாக இவர்களின் அஸ்திக்கு மரியாதை செலுத்தப்பட்டு வந்தது.

இடையில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து இருந்த 3 தலைவர்களின் நினைவுத்தூணாக இருந்த அஸ்திகள் கொண்ட இந்த இடம் 10 ஆண்டுகளுக்கு பிறகு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புத்துயிர் பெற்றுள்ளது. காமராஜர் மக்கள் இயக்கத்தின் சார்பில் தொடர் முயற்சியால் தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், அஸ்தி கலசம் கொண்ட  இடத்தில் மண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது.

153 வது காந்தி பிறந்தநாள், முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள், காமராஜரின் நினைவு நாள் என ஒப்பற்ற தலைவர்களுடைய சிறப்பு கொண்ட நாளான இன்று, அஸ்தி கலசம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.