மூடப்பட்ட பஞ்சாலைகளை மீட்டு இயக்க வேண்டும்

தேசிய பஞ்சாலை கழகத்திற்கு வரவேண்டிய 2 ஆயிரம் கோடியை மீட்டு, பஞ்சாலைகளை இயக்க வேண்டும் என தென்னிந்திய பஞ்சாலை தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தென்னிந்திய பஞ்சாலைத் தொழிற்சங்கத்தின் கூட்டு நடவடிக்கை குழுவின் கூட்டம், கோவை காட்டூரில் , உள்ள ஏஐடியுசி அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஐ.என்.டி.யூ.சி பொது செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடாகா, புதுவை என ஐந்து மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்து, பொது செயலாளர் ஆறுமுகம் பேசுகையில், தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான நிலங்கள் இரண்டாயிரம் கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. அப்பணத்தை கொண்டு தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள மூடப்பட்ட பஞ்சாலைகளை திறந்து பஞ்சாலைகளில் பணிபுரிந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 7 ம் தேதிக்கு பிறகு தென்னிந்தியா முழுவதும், பஞ்சாலை தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார். கூட்டத்தில் இராஜாமணி, பாலசுந்தரம், கோபால், தியாகராஜன், நீலமேகம், ரங்கசாமி, முருகேசன், மனோகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.