பாஜக விவசாய அணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவையிலிருந்து விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றிதழ் துறையின் தலைமையிடத்தை சென்னைக்கு மாற்றக்கூடாது என்று பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இயங்கிவரும் விதைச் சான்று மற்றும் அங்கக சான்றிதழ் வழங்கும் துறையின் தலைமை இடத்தை சென்னைக்கு மாற்றுவதாக வேளாண்மைத் துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.

இம்மனுவில் இச்சான்று வழங்கும் தலைமை இடத்தை சென்னைக்கு மாற்றினால் கொங்கு மண்டலத்தில் இயற்கை விவசாயம் முடக்கப்படும் அபாயம் ஏற்படும் என்றும், சென்னைக்கு விதைச்சான்று துறையின் தலைமை இடத்தை மாற்றுவதால் விவசாயிகள் அதன் மூலம் பல்வேறு போக்குவரத்து சிக்கல்களை நேரிடக் கூடும் என்பதாலும் இந்நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக விவசாய அணியின் மாநில தலைவர் ஜி.கே நகராஜ், சென்னையில் இயற்கை விவசாயம் என்பது இல்லாத பொழுது அங்ககச் சான்றிதழ் துறையின் தலைமையிடத்தை அங்கு மாற்றும் வேளாண்துறையின் அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக கூறினார். மேலும் கோவையில் விவசாயம் மற்றும் விதைகளை பயன்படுத்துவோர் அதிகம் இருக்கும் நிலையில் அரசு எடுத்துள்ள இம்முடிவு கொங்கு மண்டலத்தில் உள்ள விவசாயிகளுக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இத்துறையின் தலைமை இடத்தை மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாய அணி துணை தலைவர் விஜயகுமார், திருப்பூர் தெற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் விவேகானந்தன், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ், நீலகிரி மாவட்ட தலைவர் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.