கே.பி.ஆர் கல்லூரியில் வூசூ கலை நடுவர்களுக்கான பயிற்சி முகாம் 

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் வூசூ தற்காப்பு கலை சங்கத்தின் சார்பில் தேசிய அளவிலான வூசூ கலை நடுவர்களுக்கான  பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆறு நாட்கள் நடைபெற்ற  இந்த பயிற்சி முகாமில் இந்தியா முழுவதுமிருந்து 200க்கும் மேற்பட்ட நடுவர்கள்  பங்கேற்றனர்.

இதன் நிறைவு விழா நிகழ்ச்சியில் வீட்டு வசதி  மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை இணை அமைச்சர் குஷால் கிஷோர் கலந்துகொண்டு போட்டியில் சிறப்பாக பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கினார்.

கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி. ராமசாமி தனது தலைமை உரையில் உலக வூசூ சாம்பியன்ஷிப்பில் இந்தியர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளை விவரித்தார் மற்றும் தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெறுவதில் இந்தியர்களின் திறமையை பாராட்டினார்.

மத்திய இணை அமைச்சர் தனது உரையில்,  சீன தற்காப்புக் கலையில் இந்தியர்கள் தேர்ச்சி பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த விளையாட்டுக்கு அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்கள் வெற்றி பெறுவார்கள். இதனை கற்றுக் கொள்ளும் மாணவர்கள் சரியான உடல் மற்றும் மன நிலையைப் பெறுவார்கள். எனவே இது போன்ற விளையாட்டுகளை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும், என பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொடர்ந்து மோடி அரசு 2022க்குள் அனைத்து மாநிலங்களிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகர் வளர்ச்சி செய்வதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

பிற மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு சென்று வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி துறை சார்பாக குடிநீர் வசதி மின்சார வசதியுடன் கூடிய குடியிருப்புகள் அமைத்து தர மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது

மத்திய அரசு மாநிலங்களுக்குக் கொடுக்கப்படும் வீட்டுவசதி மேம்பாட்டு நிதி போதுமான அளவிற்கு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டிக்கு மத்திய மாநிலஅரசு நிதியின் கீழ் திட்டங்கள் போடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்