மாற்றுத்திறனாளி குழந்தைக்கு காலணி அணிவித்த மாவட்ட ஆட்சியர்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாற்று திறனாளி சிறுவனுக்கு ஆட்சியர் காலணி அணிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (30.7.2021) நடைபெற்றது.

அப்போது, போத்தனூர் பகுதியை சேர்ந்த மாற்றுதிறனாளியான வேல்முருகன் வந்தார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகள் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது மகனும் மாற்றுத்திறனாளியுமான அழகுமணிக்கு 3 வயதாகிறது.

பெட்டி கடை நடத்தி வந்த வேல்முருகன் கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்த நிலையில் தனக்கு உதவிடுமாறு கடந்த ஜூலை 5 மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து இருந்தார்.

இதனையடுத்து அவரது மனு பரிசீலனை செய்யபட்டு மாற்று திறனாளி சிறுவன் அழகுமணி மற்றும் சிறுவனது தந்தைக்கு காலணிகள் வழங்கபட்டது. மேலும் பள்ளி மாணவிக்கு மிதிவண்டி புத்தக பை உள்ளிட்ட உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்.

மாற்று திறனாளி சிறுவனுக்கு காலணிகளை மாவட்ட ஆட்சியர் பொருத்தினார். இதனை கண்ட வேல்முருகனின் குடும்பத்தினர் கண் கலங்கியபடி நன்றி தெரிவித்தனர்.

தற்போது வாடகை வீட்டில் வசித்து வரும் தங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கி தர வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கைகள் எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.