தனிமனித இடைவெளியை மறந்து தடுப்பூசி டோக்கன் வாங்க குவிந்த மக்கள்

கோவை மாநகராட்சி தவிர்த்த பிற பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் தடுப்பூசி போட டோக்கன் வழங்கும் பணியானது நடைபெற்று வந்தது. இதன் ஒரு பகுதியாக துடியலூர் அருகே திப்பனூரில் தடுப்பூசி டோக்கன் வாங்க ஏராளமான பொதுமக்கள் காலை 8.30 மணி முதல் குவிய துவங்கினர். 250 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும் என்ற நிலையில் 400 க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

பள்ளி வளாகத்தில் தனி மனித இடைவெளியின்றி குவிந்த பொது மக்களை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் தவித்தனர். வரிசையில் நிற்காமல் பொது மக்கள் கூட்டமாக முண்டியடித்து கொண்டு நின்றதால் அவர்களை கட்டுபடுத்த முடியாததால் டோக்கன் விநியோகம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் டோக்கன் வழங்க கோரி அதிகாரிகளுடன் பொதுமக்களும் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட நிலையில், பொது மக்களை நீண்ட போராட்டத்திற்கு பின்பு வரிசைபடுத்திய பின்பு தடுப்பூசிக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு காலதாமதாமாக தடுப்பூசி போடும் பணி துவங்கியது. தனிமனித இடைவெளி இல்லாமல் கூட்டமாக பொது மக்கள் முண்டியடித்து கொண்டு பள்ளியில் குவிந்ததால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.