தோனிக்காக ஐபிஎல் கோப்பையை மீண்டும் வெல்வோம் – ரெய்னா

தோனிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று தருவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய 14வது ஐபிஎல் டி20 தொடர், கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா பரவல் அச்சுறுத்தலால் எஞ்சியுள்ள தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது. அதன்படி, அக்டோபர் மாதம் ஐபிஎல் மீண்டும் தொடங்கவுள்ளது.

இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்றுள்ள சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல்-ல் சென்னை அணி, பிளேஆப் சுற்றுக்குக் கூட தகுதிபெற முடியாமல் வெளியேறியது.

இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை அணியின் ஃபார்ம் ஐக்கிய அரபு அமீரகத்தில் எப்படி இருக்கப் போகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஐபிஎல்-ல் சென்னை அணியில் இடம்பெறாத நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, இந்த சீசனில் திரும்பியிருப்பது வலுவாக கருதப்படுகிறது. இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், மொயின் அலி, ருதுராஜ், சாம் கரன் போன்ற வீரர்கள் நல்ல பார்மில் இருப்பதால் தங்கள் அணிக்கான வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவித்தார்.

தோனி தனக்கு ஒரு அண்ணன் போன்றவர் என தெரிவித்த ரெய்னா, அவர் மீது பெரும் மதிப்பு வைத்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறினார். இந்த முறை தோனிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று தருவோம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் ரெய்னா தெரிவித்தார்.

தகவல் : நியூஸ் 7 தமிழ்