பெகாசஸ் ஸ்பைவேர் செயலி சர்ச்சை குறித்து மத்திய அரசு விசாரணை மேற்கொள்ளும் – வானதி

கோவை காந்திபுரம் விகேகே மேனன் சாலையில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் சார்பில் ஆடிட்டர் ரமேஷ் எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், மாநில பொது செயலாளர் ஜி.கே செல்வகுமார், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் பிரேம்குமார், மாவட்டத் தலைவர் நந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆடிட்டர் ரமேஷின் படத்துக்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், ஆடிட்டர் ரமேஷ் மறைவுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றார்.  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கட்டுமான பணிகளுக்காக கோவில்கள் இடிக்கப்படுவதற்கு பதிலாக, கோவில்களை அழகுபடுத்தும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

பத்திரிகையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் செல்போன் தரவுகள் பெகாசஸ் ஸ்பைவேர் என்ற செயலி மூலம் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை குறித்து மத்திய அரசு உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கையை வெளியிடும் என்றார். கொங்குநாடு விவகாரத்தில் தனிப்பட்ட கருத்து எதுவும் இருக்க முடியாது என தெரிவித்த வானதி, கட்சியின் பொறுப்பாளராக கருத்தை தெரிவிக்க முடியும் எனவும், இப்பகுதி மக்களின் நீண்ட நாள் பிரச்சனைகள், தேவைகள் மற்றும் கோரிக்கைகளை தற்போதைய மாநில அரசு எப்படி நிறைவேற்றுகிறது என்பதை பொறுத்தே கொங்குநாடு குறித்து பாஜகவின் அடுத்த கட்ட நகர்வு இருக்கும் என்றார்.