இந்தியாவில் உள்ள ஒளிரும் சுற்றுலா தளங்கள்

பெரிய பணக்காரர்கள் சுற்றுலா என்றவுடன் ஐரோப்பாவுக்குச் செல்வோம் என்று திட்டமிடுவார்கள். அது தற்பொழுது விண்வெளிக்கு செல்லலாம் என்பது வரை வளர்ந்து விட்டது. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா? என்பது போல நம் நாட்டிலும் பாரம்பரிய, கலாச்சார அடையாளங்களையும், இயற்கையின் கொடையையும் உள்ளது. அதனை நாம் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. அப்படி இந்தியாவில் உள்ள சில இரவு நேரங்களில் ஜொலிக்கும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமான 5 சுற்றுலா தளங்களை பார்ப்போம்.

புருஷ்வாடி கானகம், மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் உள்ள ஒரு பழங்குடி கிராமம் இது. இங்கே ஆண்டுதோறும் கோடை காலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதுண்டு. இங்கே உள்ளே மின்மினிப் பூச்சிகள் தான் கவன ஈர்ப்பு அம்சம், மின்மினிப் பூச்சிகள் அந்தி சாயும் நேரத்தில் bioluminescence உயிர் பொருள்கள் வெளியேற்றும் ஒளியைப் பாய்ச்சும். இனப்பெருக்கக் காலத்தில் ஆண் பூச்சிகளை ஈர்க்க இந்த மின்மினிக்கள் இவ்வாறாக ஒளிரும்.

மே முதல் ஜூன் வரை இவற்றின் இனப்பெருக்கக் காலம். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் இப்பகுதிக்கு வந்தால் மின்மினிப் பூச்சிகள் சூழ ஒளியைக் கிழித்துக் கொண்டு பயணப்படும் அனுபவத்தைப் பெறலாம். ஒவ்வோர் ஆண்டும் இங்கு மின்மினிப் பூச்சி திருவிழா கொண்டாடப்படுகிறது. ட்ரெக்கிங் செல்வோரின் விருப்பமான இடமாக இது இருக்கிறது.

ஜுஹு பீச், மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா சென்றால் ஜுஹு கடற்கரைக்குச் செல்லாமல் வந்துவிடாதீர்கள். அதுவும் இரவு நேரத்தில் சென்று பாருங்கள். கடற்கரையில் எலக்ட்ரிக் ப்ளூ நிறத்தில் நுண்ணுயிரிகள் ஒளிர்வதைக் காணலாம். 8 மணிக்குப் பின்னர் ஜுஹு கடற்கரைக்குச் சென்றால் ஒளிரும் அலையைக் கண்டு ரசிக்கலாம்.

பீட்டல்பாட்டிம் பீச், கோவா

கோவா என்றாலே கடற்கரை. அதுவும் ஒளிரும் கடற்கரை என்றால் இன்னும் அழகுதானே. தெற்கு கோவா, வெள்ளை நிற மணல் கொண்ட கடற்கரைக்கும், டால்பின் ஸ்பாட்டிங்குக்கும் பெயர் பெற்றது. இந்த கடற்கரையிலும் கூட எலக்ட்ரிக் ப்ளூ நிறத்தில் நுண்ணுயிரிகள் ஒளிர்வதைக் காணலாம். அதனால் அடுத்த முறை நீங்கள் கோவா சென்றால் இந்தக் கடற்கரைக்கு தவறாமல் செல்லுங்கள்.

ஜெயிந்தியா மலைகள், மேகாலயா

மின்மினிப் பூச்சிகள், ஒளிரும் நுண்ணியிரிகளைப் பார்த்துவிட்டீர்களா? ஒளிரும் காளான்களையும் கண்டு ரசிக்க ஆயத்தமாகுங்கள். இதற்காக நீங்கள் மேகாலயா மாநிலத்தின் மேற்கு ஜெயிந்தியா மலைகளுக்குச் செல்ல வேண்டும்.

காடுகளின் ஊடே உங்களை அழைத்துச் செல்லும் சுற்றுலா வழிகாட்டிகள் ஒளிரும் காளான்களைக் காட்டுவார்கள். பழங்குடி மக்கள் இந்தக் காளான்களை தங்களின் வழிகாட்டிகளாகப் பயன்படுத்துகின்றனர். ரோரிடோமைசஸ் எனப்படும் புதிய இனத்தைச் சேர்ந்தது இவ்வகை காளான் என்பது கூடுதல் சுவாரஸ்ய தகவல்.

மட்டு கடற்கரை, கர்நாடகா

கர்நாடகாவின் மட்டு கடற்கரை பிக்னிக் ஸ்பாட்டாக அறியப்படுகிறது. காலை நேர நடைப்பயிற்சிக்கும், மாலை நேரத்தில் சூரிய அஸ்தமத்தின் அழகை ரசிப்பதற்கும் இந்த இடம் சிறந்த தெரிவாக இருக்கும். இங்கேயும் ஜுஹுவைப் போல் இரவு நேரத்தில் கடற்கரையில் நுண்ணுயிரிகள் ஒளிரும்.

இதை கடல் பிரகாசம் என்று அழைக்கின்றனர். இந்த வகை நுண்ணுயிரிகள் நாக்டிலுக்கா ஸ்கின்டிலன்ஸ் என்ற இனத்தைச் சேர்ந்தவை.