கோவையில் பொது போக்குவரத்து துவக்கம்

பொதுப் போக்குவரத்துக்கு தமிழகம் முழுவதும் திங்கட் கிழமை (05.07.2021) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் 520 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் கடந்த 56 நாட்களாக தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்து மூடப்பட்டிருந்தது. இதனால் பேருந்துகள் மூலமாக வேலைக்கு செல்லும் தினக்கூலி பணியாளர்கள், பெண்கள் உள்ளிட்டோர் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்ததால் தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகளுடன் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவையை பொறுத்தவரை 260 நகர பேருந்துகள் மற்றும் 260 மப்சல் பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன. மொத்தமாக 50 சதவீத பேருந்துகள் கோவை மாவட்டத்தில் இயக்கப்படுகிறது.

இவை தவிர சுமார் 400 தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் முகக்கவசம் அணிதலும், அடிக்கடி சானிடைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்துதலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

50 சதவீத பயணிகளுடன் தான் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று அரசு கூறியுள்ள நிலையில் பெரும்பாலான பேருந்துகளில் உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பேருந்து சேவை குறைவாக உள்ள ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

மாஸ்க் அணியாமல் வரும் பயணிகளுக்கு பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளதால், வேலைக்கு செல்வது சுலபமாக உள்ளதாகவும், இது நாள் வரை பலரிடம் உதவி கேட்டும், டாக்சிகளுக்கு பணத்தை செலவழித்து வேலைக்குச் சென்றதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.