திமுக யாராலும் அடக்க முடியாத யானை – முதல்வர் ஸ்டாலின்

திமுக யாராலும் அடக்க முடியாத யானை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் ஆளுநர் உரையில் யானையும் இல்லை, மணி ஓசையும் இல்லை என்றும் “யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே” என்ற பழமொழியை ஒப்பிட்டு பேசினார். அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுகவை யானை என்று குறிப்பிட்டு பேசிய எதிர்கட்சித் தலைவருக்கு நன்றி என்றும், அடக்கப்பட்ட யானைக்கு தான் மணி கட்டுவார்கள் என்றும், திமுக அடக்க முடியாத யானை எனவும் பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், யானைக்கு பலமான 4 கால்களை போன்று திமுகவுக்கு சமூகநீதி, மொழிபற்று, சுயமரியாதை, மாநில உரிமை ஆகிய 4 கொள்கைகள் தான் பலம் என்று குறிப்பிட்டார்.