பாரபட்சம் பார்க்காதவர்

-என். குமார், துணைவேந்தர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

சிறுவயதிலே தாயை நான் இழந்து விட்டதால் என்னை அதிகமாக நேசித்து வளர்த்தது தந்தைதான்.  ஆனால் அவரும் என்னுடைய 14 வயதில் தவறிவிட்டார்.  இருந்தபோதிலும் இளம் பருவத்தில் அவர் அனைத்தையும் எனக்கு கற்றுக் கொடுத்தார்.

என் தந்தை நீலகண்டபிள்ளை ஒரு விவசாயி. எங்கள் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம், கடுக்கரை கிராமத்தில் விவசாயம் தான் பிரதான தொழிலாக இருந்தது.

அவர் செல்லும் இடத்திற்கெல்லாம் என்னையும் அழைத்துக் கொண்டு செல்வார். அவருக்கு குறைவான வருமானம் இருந்தாலும் கூட மாதம் ஒருமுறை எனக்கு ஏதாவது புது பொருட்கள்  வாங்கி கொடுப்பார். அந்த நாளுக்காக நானும் காத்திருப்பேன்.

தூங்குவதற்கு முன் அவர் எனக்கு கூறிய இயற்கை சார்ந்த கதைகளே இயற்கையின் மீது எனக்கு அதிக ஈடுபாடு வர காரணமாக இருந்தது.

விவசாயி மகனான நான் வேளாண் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக உள்ளது மிகவும் பெருமையாக உள்ளது.  இந்த பதவியில்  நான் இருக்கும் போது அவர் உயிருடன் இல்லை என்பது வருத்தமாக இருப்பதோடு அவர் இருந்திருந்தால் இப்போது நான் வகிக்கும் பதவியை கண்டு மகிழ்ந்திருப்பார்.

அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தமான விசயம், எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அனைவரையும் சமமாக நடத்துவார். நானும் இதை கடைபிடித்து வருகிறேன்.