பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆட்டோவை கயிறால் கட்டி இழுத்துவந்து கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு இன்று (10.06.2021) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. பெட்ரோல், டீசல் விலை ரூ.100ஐ எட்டும் தூரத்தில் உள்ளது. இதனால் நடுத்தர மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்தநிலையில், இன்று நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சி தலைவர் ராஜா உசேன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

அரசு கலால் வரியை உடனே திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர் தெரிவித்தனர்.