கடன்களை செலுத்த நிர்பந்திக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

-மாவட்ட ஆட்சியர்

கொரோனா  பெருந்தொற்று 2ம் அலை பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் முழு ஊரங்கு கடந்த 10.5.2021 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் முழு ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கோவையில் உள்ள தனியார் வங்கிகள் மற்றும் நுண் நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வழங்கிய கடன் தவணைத் தொகையை திரும்ப செலுத்தக் கேட்டு நிர்பந்தம் செய்து வருவதாக பல்வேறு இடங்களிலிருந்து கோவை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு புகார்கள் வருகின்றன.

கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை பரவும் இச்சூழலில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களது வாழ்வாதார நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்பட்டு இக்கட்டான காலகட்டத்தில் உள்ளனர். எனவே, அவர்களது கடனுக்கான தவணைத் தொகையை வசூலிக்க நிர்பந்தம் செய்வதை தவிர்த்து கால அவகாசம் வழங்கி கூடுதல் வட்டி வசூலிப்பதை தவிர்க்க வேண்டும் இது தொடர்பாக மாவட்ட அளவில் திட்ட இயக்குநர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், உதவித்திட்ட அலுவலர்கள் (மகளிர் திட்டம்) மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் திரும்ப செலுத்தும் கால அட்டவணையை மாற்றி அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது. மேலும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தனியார் வங்கிகள் மற்றும் நுண் நிதி நிறுவன பணியாளர்கள் வெளியூர் நபர்களாக இருப்பதாலும், கடன் தொகை வசூல் செய்வதற்காக அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வருவதாலும் இவர்கள் மூலம் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது.

எனவே இது தொடர்பாக எந்த புகார்களுக்கும் இடம் அளிக்காத வகையில் செயல்படவும், இதையும் மீறி புகார்கள் ஏதேனும் கோவையில் எழும்பட்சத்தில் இச்செயல் தற்போது அரசு விதித்துள்ள ஊரடங்கு நடைமுறைகளை மீறிய செயலாக கருதப்பட்டு தொடர்புடைய அனைத்து தனியார் வங்கிகள், நுண் நிதி கடன் நிறுவனங்கள் மற்றும் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.