இனி வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் புகார் தெரிவிக்கலாம்

பொதுமக்கள் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் புகார் தெரிவிக்கும் சேவையை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரதினம் இன்று (07.06.2021) தொடங்கி வைத்தார்

காவல் நிலையம் வந்து புகார் தெரிவிப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் சிரமம் இன்றி தங்களது புகார்களை தெரிவிக்க ஏதுவாக இன்று முதல் கோவை மாவட்டத்தில் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் புகார் தெரிவிக்கும் சேவையை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தொடங்கி வைத்தார்.

இந்த சேவையானது திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை தினம் தோறும் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை ஒரு மணி நேரம் நடைபெறும். இதில் பொதுமக்கள் தங்களுடைய புகார்களை வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பதிவு செய்யலாம். மேலும் வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்க இயலாதவர்கள் கொடுக்கப்பட்டுள்ள 77 08 100 100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வனகரதினம் கூறுகையில்:

பொது மக்களின் சிரமங்களை தடுக்கும் வகையிலும் புகார் தெரிவிக்க வரும் நபர்களுக்கு உள்ள பல்வேறு பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு இந்த சேவையானது தொடங்கப்பட்டுள்ளது. இனிமேல் தினம்தோறும் ஒரு மணி நேரம் இந்த சேவை நடைபெறும் அப்போது பொதுமக்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.

அவர்களுடைய புகார்கள் பதிவு செய்யப்படும் அதனைத் தொடர்ந்து புகார் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ள முடியாதவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என்றார்.

மேலும் இதற்காக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனியாக பிரிவு தொடங்கப்பட்டு அதற்காக காவல்துறையினரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.