கல்பனா சாவ்லா விருது: தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்

துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களை செய்யும் பெண்களுக்கான “கல்பனா சாவ்லா விருது” ஆண்டு தோறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் கையால் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது பெறத் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இவர்களை கவுரவித்து அங்கீகாரம் அளிக்கும் வகையில் பதக்கம் மற்றும் ரூ.5 லட்சத்திற்கான காசோலையும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து அரசின் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான “கல்பனா சாவ்லா விருது” ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால், சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ.5 லட்சத்திற்கான காசோலையும் மற்றும் ஒரு பதக்கமும் அடங்கும். தமிழ்நாட்டைச் சேர்ந்த, துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினைப் பெறத் தகுதியுள்ளவர்.

2021ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவோ அரசுச் செயலாளர், பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 அவர்களுக்கு ஜூன் 30 ஆம் தேதி/ 2021-க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். விருது பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்படுவார். என அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.