புற்று நோயாக மாறக்கூடிய அல்சர்

-டாக்டர். பி.செந்தில்நாதன்,
குடல் நோய் அறுவை சிகிச்சை நிபுணர், ஜெம் மருத்துவமனை

புகை பழக்கம்; தற்கொலைக்கு சமம்!

சிறிதாக தெரியும் பல விஷயங்கள் தான் உலகத்தையே புரட்டிப்போட்டு வந்துள்ளது வரலாறு நமக்கு கூறும் செய்தி. சிறு வைரஸ் தான் இந்த உலகத்தின் இயல்பு நிலையை இரண்டு ஆண்டுகளாக தவிடுபொடியாக்கி வருகிறது.

சிறிய தோற்றம் உள்ள சிகரெட் தான் ஆண்டிற்கு 12 லட்சம் உயிர்களை இந்தியாவில் காவு வாங்குகிறது என்பது புகைப்பவர்களுக்கு பலருக்கும் தெரிந்திருந்தும், அதை கைவிடுவதில்லை. இதுவரை புகையிலை நுரையீரலை பாதிக்க செய்யும் என்ற தகவலை கேட்டிருப்போம்.ஆனால், புகையிலை பழக்கத்தால் கண்பார்வை பாதிப்படையும், சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும், இதயம் பலவீனம் ஆகும் என்பனவற்றை கேட்டிருப்போமா?

புகையிலையால் ஏற்படும் பாதிப்புகளை பலரிடமும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதியை ‘உலக புகையிலை எதிர்ப்பு தினம்’ என அனுசரித்து வருகிறது.

புகையிலையினால் பிற உடல் உறுப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை பற்றி நம் கோவை பகுதியை சேர்ந்த மருத்துவர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்டதன் தொகுப்பு:

புற்று நோயாக மாறக்கூடிய அல்சர்

உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு வருடமும் ஒரு வாசகத்துடன் புகையிலை ஒழிப்பு தினத்தை அனுசரித்து வருகிறது. அதே போல இந்த வருடமும் “புகையிலையில் இருந்து விடுபட்டு ஒரு வெற்றியாளராக இருக்க வேண்டும்” என்ற ஒரு வாசகத்தை வைத்துள்ளது.

புகையிலை, பீடி, சிகரெட், பான்பராக் போன்று எந்த வகையாக இருந்தாலும், அது உடலுக்கு சென்று விட்டால் உடலில் பல வித இன்னல்களை ஏற்படுத்தும்.

உண்ணும் உணவு முதலில் ஜீரண குழாய் வழியாகத்தான் உள்ளே செல்கிறது. ஜீரண மண்டலம் என்பது உணவுக் குழாயில் ஆரம்பித்து, ஆசான வாயிலில் முடிய கூடியது.

நாக்கில் இருந்து ஆரம்பித்து, தொண்டை மற்றும் நுரையீரலில் உருவாகக்கூடிய புற்று நோய்க்கும் புகையிலை காரணம். அதே போல ஜீரண மண்டலத்தில் இருக்க கூடிய உணவு குழாய், இரைப்பை மற்றும் கணைய புற்று நோய் ஏற்படுவதற்கான நேரடியான தொடர்பும் புகையிலைக்கு உள்ளது.
அல்சர் சம்மந்தப்பட்ட நோய்கள் இப்போது சாதாரணமாகவே பலரையும் வெகுவாக பாதிக்கிறது. இப்படி பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அல்சர் நோய்க்கும், புகையிலைக்கும் தொடர்பு உள்ளது. புகையிலையினால் ஏற்படக்கூடிய அல்சர் பாதிப்பு புற்று நோயாக மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதோடு, அது இரைப்பை புற்று நோயாகவும் மாறுகிறது. இதைக் கருத்தில் கொண்டும் புகை பழக்கத்தை விட்டு விட வேண்டும்.

கல்லீரல் நம் உடலுக்குத் தேவையான பல வேலைகளை செய்கிறது. அதனை பாதிக்க கூடிய ஒரு காரணியாகவும் புகையிலை உள்ளது. புகை பழக்கத்தை விட்டால் ஈரலில் ஏற்படக் கூடிய நோய்களான புற்று நோய், ஈரல் வீக்கம் போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.
புற்று நோய்க்கும், புகையிலைக்கும் நிறைய தொடர்பு இருந்தாலும், பெருங்குடல் மற்றும் மலக்குடலில் ஏற்படக்கூடிய புற்று நோய்க்கும், புகையிலைக்கும் தொடர்பு உள்ளது.
பெருங்குடல் அழற்சியினால் ஏற்படும் பாதிப்புக்கும் புகைபிடித்தல் காரணமாக உள்ளது. புகையிலையினால் ஜீரண மண்டலத்திலே இத்தனை நோய்கள் வரும் போது, ஜீரண மண்டலம் அல்லாத நுரையீரல், தொண்டை மற்றும் பிற உறுப்புகளில் எத்தனை பாதிப்புகள் ஏற்படும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

இவற்றை உணர்ந்து, இந்த புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டோம் எனில் நாம் அனைவருமே வெற்றியாளர்கள் தான்.