ம.நீ.ம  துணைத் தலைவர்  கட்சியில் இருந்து விலகல்

மக்கள் நீதி மய்ய கட்சியின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் தீடிரென கட்சியில் இருந்து  விலகுவதாக இன்று (06.05.2021) அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: “மக்கள் நீதி மய்யம்  கட்சியில்  இருந்து விலகுவது என்கின்ற கடினமான முடிவினை மிகக் கவனமாக எடுத்திருக்கிறேன்.  கட்சியின் இத்துணை பெரிய தோல்விக்குப் பிறகும், தனது தோல்விக்கு பின்னரும்  தலைவர் அவர்கள் தனது அணுகுமுறையில் இருந்து மாறுபட்டு செயல்படுவதாக எனக்குத் தெரியவில்லை. மாறிவிடுவார் என்கின்ற நம்பிக்கையும் இல்லை. எனக்குத்  தெரிந்த தலைவர் திரு.கமல்ஹாசன் கொள்கைக்காவும், எளிய தொண்டர்களுக்கு தோழனாகவும், அனைத்து நல்ல தலைமை பண்புகளையும் கொண்ட நம்மவராக மறுபடியும் செயல்பட வேண்டும் என்று வெளியே இருந்து வாழ்த்துகிறேன்.

தலைவர் கமல்ஹாசன் அவர்களால் நான் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்திருந்தாலும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் உற்சாகமும் உத்வேகமும் தான் என்னை இந்த இரண்டரை ஆண்டுகளில் இரண்டு முக்கியமான தேர்தல்களை சந்திப்பதற்கான வலிமையை கொடுத்தது. அரசியல் எனும் விதையை எனக்குள் விதைத்த தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மக்கள் சேவையை எங்கிருந்து செய்தாலும், காந்தியார் சொன்னது போல் நீங்கள் பார்க்க விரும்பும் மாற்றமாக இருங்கள் என்பதற்கேற்ப சிறப்பாகவும் அறத்துடனும் செயல்படுவேன் என்ற உறுதியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விடைபெறுகிறேன்”. என தெரிவித்துள்ளார்.