18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை தடுப்பூசி இல்லை : சுகாதாரத்துறை அறிவிப்பு

கோவை: கோவையில் கொரோனா தடுப்பூசி குறைவாக இருப்பதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நாளை துவங்கப்படாது என்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் சுகாதாரத் துறையினர் அறிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மே 1ம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் நாட்டின் பல மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்திலும் கொரோனா தடுப்பூசிகள் குறைவாகவே உள்ளன. இந்தநிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நாளை துவங்கப்படாது என்றும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் தற்போது 12 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் மட்டுமே இருப்பில் உள்ளன.

இதில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 4 ஆயிரம் தடுப்பூசிகளும், இஎஸ்ஐ மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் தலா ஆயிரம் தடுப்பூசிகளும், மாவடத்தில் உள்ள சுகாதார நிலையங்களில் 3000 ஆயிரம் தடுப்பூசிகளும், ஊரக அரசு மருத்துவமனைகளில் 3500 தடுப்பூசிகளும் தற்போது இருப்பில் உள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.