மீண்டும் தாமதமாகும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்

ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்பட பலர் நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர் ஆர் ஆர்) படம் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் உருவாகி வருகிறது.

ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி, கொரோனா காரணமாக அக்டோபர் மாதம் 13 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருவதால், படப்பிடிப்பை நடத்துவது சவாலாக இருந்து வருகிறது.

நடிகர் ராம் சரண் தனது தயாரிப்பில் சிரஞ்சீவி நடிக்கும் ’ஆச்சார்யா’படத்தில் பங்கேற்றதால் இந்தப் படப்பிடிப்புக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஜூனியர் என்டிஆரும் அவரும் சேர்ந்து நடிக்க வேண்டிய காட்சிகளின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த வருடத்துக்கு தள்ளிப் போகும் என்று தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.