கொரோனாவால் ஓரளவு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க புதிய மருந்து!

இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தினமும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தினசரி கரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் இரண்டாயிரத்தை எட்டியுள்ளது. மேலும் சில மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் கொரோனா சிகிச்சையில் பயன்படுத்த ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் ‘விராஃபின்’ என்ற மருந்துக்கு, இந்தியாவின் மருந்துகள் தலைமைக் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் இன்று அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதியளித்துள்ளது. கொரோனாவால் ஓரளவு பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சையில் இந்த மருந்தைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விராஃபின் மருந்து, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வேகமாகக் குணமாக உதவும் என ஸைடஸ் காடிலா நிறுவனம் கூறியுள்ளது. நாடு முழுவதும் 22-25 நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனையில், விராஃபின் செலுத்தப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் (செயற்கை சுவாசம்) குறைந்த அளவே தேவைப்படுவதாகவும், கொரோனா சிகிச்சையில் பெரும் சவாலாக இருக்கும் சுவாசக் கோளாறைக் கட்டுப்படுத்தும் என்பதை தெளிவாகக் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளது.

மருத்துவமனைகளில் மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைப்படி இந்த மருந்து கிடைக்கும் எனவும் ஸைடஸ் காடிலா நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.