கேரளாவை சேர்ந்த பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இளைஞர் பாரம்பரிய மூலிகை மருத்துவத்தில் சர்வதேச பட்டம் பெற்றுள்ளார்.
புற்றுநோய்க்கான பாரம்பரிய மூலிகை சிகிச்சைக்காக இவருக்கு, ஜெர்மனி நாட்டின் உலக அமைதி பல்கலைக்கழகம் சார்பில் ” டாக்டர் ஆஃப் ட்ரடிஷனல் ஹெல்த் கேர்” (DOCTOR OF TRADITIONAL HEALTH CARE) என்கிற பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
கேரள மாநிலம் அட்டப்பாடி, முக்காளி ஆதிவாசி கிராம பழங்குடியின் சமூகத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (30). கேரளாவில் அரசுப்பள்ளியில் பயின்ற இவர், பாரம்பரிய மருத்துவ படிப்பை கேரளாவில் உள்ள கல்லூரியில் முடித்தார். தொடர்ந்து, 2017ல் இலங்கை கொழும்பில் பாரம்பரிய மருத்துவத்தில் புற்றுநோய்க்கான ஆராய்ச்சி படிப்பில் பி.எச்.டி பட்டம் பெற்று, 2018ல் தமிழ்நாடு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
கோவை, தமிழக-கேரள எல்லைப்பகுதியான ஆனைக்கட்டியில் பொன்னியம்மால் குருக்குலம் என்கிற பெயரில் ஆதிவாசி பாரம்பரிய மூலிகை மருத்துவ மையத்தை நடத்தி வருகிறார்.
தொடர் சிகிச்சைக்காகவும், மூலிகை வைத்திய முறையை காப்பதற்காகவும் இந்த பட்டம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்திலும் இணையத்தளம் வாயிலாக தன்னை அணுகுவோருக்கு சிகிச்சையையும், ஆலோசனைகளும் வழங்கி வருகிறார்.
இந்த உயரிய விருது தனது பணிக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தை அளிப்பதாக கூறும் ராஜேஷ், அழிந்து வரும் மூலிகை வைத்தியத்தை மீட்டெடுப்பது காலத்தின் அவசியம் என்கிறார்.