ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் நன்மை பயக்கும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார் மோடி !

கோவையில் கொடிசியா மைதானத்தில் பிரச்சாரத்திற்காக வந்த  பிரதமர் மோடி முன்னதாக கொடிசியா வளாகத்தில் தமிழகத்திற்கு நவீன உள்கட்டமைப்பு வசதிகளை துவக்கி வைத்தார்.

“வளமான தமிழகத்திற்கு நவீன உட்கட்டமைப்பு வசதிகள்” நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியில் கட்டப்பட்டுள்ள 1280 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் திரு குமரன் நகர் பகுதியில் 1248 அடுக்குமாடி குடியிருப்புகள், மதுரை மாவட்டத்தில் இராஜாக்கூர் பகுதியில் 1088 அடுக்குமாடி குடியிருப்புகள், திருச்சிராப்பள்ளி மாவட்டம், இருங்களூர் பகுதியில் 528 அடுக்குமாடி குடியிருப்புகள், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு அருகில் உள்ள கோரம்பள்ளம் பாலம், ரயில்வே மேம்பாலம் மற்றும் அதன் இணைப்பு சாலை விரிவாக்க பணிகளை துவக்கி வைத்தார். மேலும் நெய்வேலியில் புதிய 2×500 மெகாவாட் அனல் மின் திட்டம், தென்மாவட்டங்களில் 750 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள், கீழ்பவானி கால்வாய் நவீனப்படுத்தும் திட்டம், ஒன்பது சீர்மிகு நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கும் திட்டம், தூத்துக்குடி மாவட்டத்தில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 5 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்வில் பேசிய பிரதமர், இன்று இங்கு கோயம்புத்தூரில் நான் இருப்பது எனக்கு அளவில்லா மகிழ்ச்சி அளிக்கிறது,  இது தொழில் நகரம் புதுமை படைக்கும் நகரம். ஒட்டுமொத்த தமிழ் நாட்டுக்கும் நன்மை பயக்கும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி இருக்கின்றோம். பவானிசாகர் அணை நவீனமயமாக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது இரண்டு லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலத்திற்கு நீர் பாசனத்திற்கு உதவும். இதன் வாயிலாக ஈரோடு திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்கள் பயன் பெரும். நமது விவசாயிகளுக்கு இத்திட்டம் உதவி அளிக்கும். இத்தருணத்தில் வான்புகழ் வள்ளுவர் குரலை உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் என்ற திருக்குறளை சுட்டி காட்டினார். இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் தமிழகம் பெரும் பங்காற்றி வருகின்றது.  இந்நிலையில் மின்திட்டங்களை துவக்கி வைத்துள்ளதற்கு பெருமிதம் கொள்கிறேன். நெய்வேலியில் 7 ஆயிரம் கோடியில் துவங்கப்படும் மின் திட்டத்தில் 65 சதவீதம் தமிழகத்திற்கே வழங்கப்படும்.  தமிழ்நாடு தூத்துக்குடி துறைமுகத்தில் கொண்டு வந்துள்ள  திட்டங்கள் சரக்கு கையாளும் திறனை மேலும் வலுப்படுத்தும்.  உலக அளவில் வர்த்தகம் மற்றும் சரக்கு கையாளும் மையமாக இந்தியா பிரதிபலிக்கின்றது. துறைமுகம் சார்ந்த ஆராய்ச்சி குறித்த இந்திய அரசின் நிலைப்பாட்டை சாகர் மாதா திட்டத்தின் மூலம் நன்கு உணரமுடியும். இத்திட்டத்தின் கீழ்,  2015ஆம் ஆண்டு முதல் 2035 ஆம் ஆண்டு வரையில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் செலவில் 575 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இவற்றுள் துறைமுகங்களை நவீனமயமாக்கல்,  புதிய தொழில் நுட்பங்களை உருவாக்குதல்,  இணைப்புச் சாலைகள் விரிவாக்கம், துறைமுகத்தோடு தொடர்புடைய தொழில் வளர்ச்சி,  ஆகியவை அடங்கும். அதுமட்டுமல்லாமல் சென்னைக்கு அருகிலுள்ள ஊரான குரோம்பேட்டையில் பல்வேறு சரக்குகளை கையாளும் ஒரு புதிய பூங்கா விரைவில் துவக்கப்பட உள்ளது. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாகர் மாதா திட்டத்தின் மூலம் வ.உ.சி துறைமுகப் பகுதியில் உள்ள சாலைகள் விரிவுபடுத்தப்பட உள்ளது. ரயில், மேம்பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக துறைமுகத்திற்கு வந்து செல்லும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.   சரக்கு வாகனங்கள் துறைமுகத்திற்கு வந்து செல்லும் நேரமும் குறையும். வளர்ச்சி சுற்றுச்சூழல் மீதான அக்கறையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. துறைமுகத்தில் ஏற்கனவே 500 கிலோ வாட் திறன் கொண்ட மேற்கூரை சூரிய மின்சக்தி திட்டம் நிறுவப்பட்டுள்ள நிலையில் தற்போது 140 கிலோ வாட் திறன் கொண்ட மேற்கூரை சூரிய மின்சக்தி திட்டம் மூலம் அமைக்கும் பணிகள் நடைபெகிறது. பிரதமரின் வீட்டு வசதி திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர்,  மதுரை , திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் சுமார் 332 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4344 வீடுகளை திறந்து வைத்ததில் நான் பெருமிதம் கொள்கிறேன். நாடு சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் ஆன நிலையில்,  குடியிருப்புகள்  இல்லாத மக்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்படும்,, தமிழ்நாட்டில் நகரமயமாக்கம்  ஒட்டுமொத்த வளர்ச்சி குறித்து மத்திய அரசு முனைப்போடு இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் சீர்மிகு நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டணங்கள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களுக்கான அடிக்கல் நாட்டியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நகரங்களில் பல்வேறு சேவைகளை செவ்வனே செய்து வைக்கப்பட்ட சிறப்பாய் தொழிநுட்பம் சார்ந்த தீர்வுகளை  வழங்கும்  திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்விருக்கும் வாழ்வாதாரத்திற்கும் மிகப்பெரிய உந்து சக்தியாக விளங்கும் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். மக்களின் கனவுகளை நிறைவேற்ற தொடர்ந்து பணியாற்றுவோம் சுயசார்பு பாரதத்தை உருவாக்குவோம் என்று கூறினார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் புரோகித், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பாராளுமன்ற விவகாரம், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர். பன்னீர்செல்வம் மற்றும் முதல்வரும் உரையாற்றினர்.