கல்வி உயர்ந்த நிலையில் இருப்பதற்கு கிறிஸ்தவ பள்ளிகள்தான் காரணம்

முதலமைச்சர் பேச்சு

கோவை கொடிசியா அரங்கில் தமிழக கிறிஸ்தவ ஜனநாயக கூட்டமைப்பின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர், கிறிஸ்தவ மக்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். கிறிஸ்தவர்களின் முக்கிய பயணமாக விளங்கும் ஜெருசலேம் பயணத்திற்கு 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 35 ஆயிரம்  ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் ஜெருசலேம் செல்பவர்களின் எண்ணிக்கை 500 லிருந்து 1000 பேர் ஆக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் கல்வி உயர்ந்த நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் கிறிஸ்தவ பள்ளிகள் தான் என்று கூறினார் .

மேலும் அவர்,  இனி சிறுபான்மையின மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தேர்தலில் கூட்டணிகள் மாறினாலும் கொள்கைகள் மாறாது அதிமுகவினர் அனைத்து மத நிகழ்வுகளிலும் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.