உரிமைகளை மீட்டெடுக்கும் உண்ணாவிரத போராட்டம்

கோவையில் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தின் வருங்கால சந்ததியினர் மற்றும் இளைஞர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் மாபெரும் உண்ணாவிரதம் நடத்த உள்ளதாக பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கான கூட்டமைப்பினர் இன்று (05.02.2021) செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் என வகைப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த 143 சமுதாய மக்களை ஒன்றிணைத்துப் பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கான   கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்கூட்டமைப்பின் முதல் மாநாடு கோவையில் நடைபெற்றது.

இதில், முன்னாள் காவல் துறையினர், முன்னாள் அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள் உட்பட பிற்படுத்தப்பட்டோர் சமுதாய தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர் இளைஞர்களின் நலன் கருதியும், வருங்கால சந்ததிகளின் உரிமையை பாதுகாக்கும் விதமாக கோவையில் ஒரு நாள் அடையாள உண்ணாநோன்பு இருக்க முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் காவல்துறை அதிகாரியும்,கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்   ரத்தினசபாபதி பேசியதாவது: பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தின் நலன் கருதியும், உரிமைகளை மீட்டெடுக்கும் விதமாகவும், அவர்களுக்கு கல்வி,வேலை வாய்ப்பில் நேர்மையான முறையில் கணக்கெடுத்து வாய்ப்பு வழங்க வேண்டும் என கூறினார். இது போன்ற இழந்த உரிமைகளை மீட்கும் விதமாக, வரும் 8 ஆம் தேதி கோவை, பவர் ஹவுஸ் அருகில் ஒரு நாள் அடையாள உண்ணாநோன்பு நடைபெற உள்ளது எனவும், இதில் கோவை,திருப்பூர் பகுதிகளில் இருந்தும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தினர் கலந்து கொள்ள உள்ளதாகவும்  தெரிவித்தார்.