சத்குரு வரைந்த ஓவியம் மூலம் திரட்டிய ரூ 2.3 கோடி நிதி: கொரோனோ நிவாரண பணிக்கு வழங்கினார்

ஈஷா அவுட்ரீச் சார்பில் கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக சத்குரு மேலும் 2.3 கோடி ரூபாய் நிதியை வழங்கியுள்ளார். அவர் `சிர்கா 2020′ (Circa 2020) என்ற தலைப்பில் வரைந்த 3-வது ஓவியத்தின்மூலம் இந்நிதி திரட்டப்பட்டுள்ளது.

இதற்குமுன் `முழுமையாக வாழ்’ என்ற தலைப்பில் சத்குரு வரைந்த முதல் ஓவியம் ரூ.4.14 கோடிக்கும், ஈஷாவின் கம்பீரமான `பைரவா’ காளையின் நினைவாக வரைந்த ஓவியம் ரூ.5.1 கோடிக்கும் ஏலம் போனது. அதன்மூலம் வந்த நிதிகளையும் சத்குரு கொரோனா நிவாரணப் பணிகளுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஈஷா அவுட்ரீச் அமைப்பானது கிராமப்புற மக்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு உதவிகளை பல ஆண்டுகளாக செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக லாக் டவுன் அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து கிராம மக்களுக்குத் தேவையான பல்வேறு நிவாரண உதவிகளை செய்யத் தொடங்கியது.

குறிப்பாக கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் தொலைதூர மலைவாழ் கிராமங்களில் இந்த அமைப்பு உதவிகள் செய்து வருகிறது. ஏழை மக்களுக்கு உணவளிப்பது, மருத்துவ மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான மருத்துவ கருவிகள், முகக் கவசம், சானிடைசர்கள் வழங்குவது, நோய் எதிர்பு சக்தியை அதிகரிப்பதற்காக நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீர் வழங்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் பயன்பெற்றனர்.