ஒயிலாட்ட அரங்கேற்ற விழா

கோவையை அடுத்த கள்ளிப்பாளையம் பகுதியில் நடைபெற்ற ஒயிலாட்ட அரங்கேற்ற விழாவில் வண்ண கோலமிட்ட மைதானத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து அசத்தலாக ஒயிலாட்டம் ஆடினர்.

தமிழகத்தின் நாட்டுப்புற கலைகளில் பிரதானமானது ஒயிலாட்டம். இக்கலையை, கோவை உட்பட கிராமந்தோறும் வளர்க்க, சிம்மக்குரல் ஒயிலாட்ட கலைக்குழு சார்பில் 5 வயது குழந்தைகள் துவங்கி பெரியவர்கள் வரை தொடர்ந்து பல ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவ்வாறு பயிற்சி பெற்ற ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழா .கள்ளிப்பாளையம் ஆவரங்காட்டு மாரியம்மன் கோவில் மைதான வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. கலைக்குழுவின் தலைவர் சதீஷ்குமார் தலைமையில், அன்னூர், கோவில் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், உள்ள ஒயிலாட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர். விழாவில் திருமுருக நாத சுவாமி திருமடம் சுந்தர்ராச சுவாமிகள், இயற்கை வேளாண் விஞ்ஞானி அரிமா டாக்டர் மயில்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரங்கேற்றத்தை துவக்கி வைத்தனர்.

வண்ண கோலமிட்ட மைதானத்தில் தமிழகத்தின் பாரம்பரிய கிராமிய கலை பயிற்சி பெற்றவர்கள் இணைந்து கலைக்குழுவின் ஆசிரியை செல்வி தன்யா சிவசாமி ஒருங்கிணைப்பில் கூடி நின்று ஒயிலாட்டம் அரங்கேற்றம் நடத்தியது கூடியிருந்தவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. கிராமிய கலை குறித்து ஒயிலாட்டம் ஆடி, இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில் சிம்மக்குரல் ஒயிலாட்ட கலைக்குழுவின் நாட்டுப்புற பாடல்கள் பம்பை இசையுடன்,முளைப்பாரி,ஒயிலாட்ட சீர் வரிசையுடன் சிறுவர் முதல் பெரியவர் வரை, உற்சாகத்துடன் நடனமாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.