மாஸ்டர் வெளியீடு : திரையரங்குகளில் விஜய் ரசிகர் பட்டாளம்..!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, கடந்த 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், தளர்வுகளின் அடிப்படையில் அரசு 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க அனுமதி அளித்தது. ஆனால், திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வராததால் சுமார் 400 திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டன. இதனையடுத்து 50% இருக்கைகளுடன் தமிழகம் முழுவதும் விஜயின் மாஸ்டர் திரைப்படம் 1000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஒடிடியில் வெளியாகாமல் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அதன் தயாரிப்பாளர் தெரிவித்த நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் 1000 திரையரங்குகளில் திரையிட சம்மதித்தனர். பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை வரவேற்கும் விதமாக, ரசிகர்கள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். திரையரங்குகளில் ஒரு இருக்கை விட்டு அமரும் வகையில், இருக்கைகள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவுப்படி 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால், நிறையபேர் டிக்கெட் கிடைக்காமல் திரும்பிச்சென்றனர். மேலும் பிளாக்கில் 700 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை டிக்கெட் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.