கரோலினாவுக்கு தக்க பதிலடி கொடுத்தார் பி.வி.சிந்து

இந்தியன் ஓபன் பேட்மிண்டனில், ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினை வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் ஒலிக்பிக் இறுதிப்போட்டியில் அவரிடம் தோற்றதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற இந்தியன் ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் தொடரின் முதல் நிலை வீராங்கனையான கரோலினா மரினை நேர்செட்களில் வென்று, சிந்து வாகை சூடினார். மூன்றாம் நிலை வீராங்கனையான சிந்து, முதல் செட்டில் 16 புள்ளிகள் சேர்க்கும் வரை முன்னணியில் இருந்தார். இதன்பின்னர் மரின் கடும் சவாலைக் கொடுத்தார். எனினும் சூதாரிப்புடன் விளையாடிய சிந்து அந்த செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றினர். முதல் செட்டை வென்ற உத்வேகத்தால் இரண்டாவது செட்டில் ஆதிக்கம் செலுத்திய சிந்து, அந்த செட்டை 21-16 என்ற கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தமதாக்கினார்.

இதன்மூலம் ரியோ ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டியில் மரினிடம் வாங்கிய தோல்விக்கு சிந்து பதிலடி கொடுத்தார். மேலும் இந்தியன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் முதல் முறையாக சிந்து சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்.