ஹிந்துஸ்தான் கல்லூரியில் கிராபிக் டிசைன் பட்டப்படிப்பு துவக்கம்

இந்தியாவிலேயே முதல் முறையாக பல்கலைக்கழக மானியக்குழு அனுமதியுடன் கிராபிக் டிசைன் பட்டப்படிப்பு (B.VOC)  கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் துவங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழுவானது தொழில்முறை கல்விகளை ஊக்குவித்து வரும் சூழலில், இந்தியாவிலேயே முதல் முறையாக கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கிராபிக் டிசைன் பட்ட மற்றும் பட்டயப்படிப்பை மாணவர்களுக்கு வழங்குவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. அதோடு, பாரதியார் பல்கலைக்கழகமும் இந்த படிப்பை அங்கீகரித்துள்ளது.

இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பு இன்று (26.10.2020) அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அதில் பேசிய கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் சர்ஸ்வதி கண்ணையன் பேசுகையில், “பல்கலைக்கழகத்தில் அங்கீகாரம் பெற்ற பட்டப்படிப்பை அறிமுகப்படுத்துகிறோம். கணினியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய தலைமுறைக்கு அனிமேசன் மற்றும் கிராபிக்ஸ் டிசைன் படிப்புகள் நிச்சயமாக அவர்களின் நல்வாழ்வுக்கு உதவும்.” என்றார்.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் பொன்னுசாமி கூறுகையில், “மாயா அகாடமியுடன் இணைந்து கல்லூரியில் இந்த படிப்பு துவங்கப்பட்டுள்ளது. முதலாண்டில் 60 மாணவர்கள் இணைந்துள்ளனர். இந்த படிப்புக்கு உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உள்ளன. இது மூன்றாண்டு பட்டப்படிப்பு. இந்த கல்வியை ஓராண்டில் நிறுத்திக் கொள்பவர்களுக்கு கல்லூரி மற்றும் மாயா அகாடமியின் சான்றிதழ் வழங்கப்படும். 2 ஆண்டுகள் பயிலும் மாணவர்களுக்கு பட்டயப்படிப்புக்கான சான்றிதழும், 3 ஆண்டுகள் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு பட்டப்படிப்புக்கான சான்றிதழும் வழங்கப்படும்.” என்றார்.

இந்நிகழ்ச்சியில், இந்துஸ்தான் அறக்கட்டளை செயலாளர் பிரியா சதீஷ் பிரபு, கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி கருணாகரன், மாயா அகாடமியின் முதன்மை செயல் அதிகாரி சம்ஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.