ஏழு வயது சிறுவர்கள் யோகாவில் உலக சாதனை

கோவையில் ஒரே யோகா பயிற்சி மையத்தை சேர்ந்த ஏழு வயதான  சிறுவன், சிறுமி ஆகிய இருவர் யோகாவில் இரு வேறு புதிய உலக சாதனைகளை நிகழ்த்தி அசத்தியுள்ளனர்.

கோவை சேரன் மாநகர் பகுதியை சேர்ந்த நரேந்திரன், ரேணுகா தேவி தம்பதியரின் மகளான இரண்டாம் வகுப்பு படிக்கும் தயநிதா மற்றும் பாரதி நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் மற்றும் சித்ரகலா ஆகியோரின் மகனான இரண்டாம் வகுப்பு பயிலும் அஷ்வந்த் ஆகிய இருவரும் பல்வேறு யோகாசனத்தை செய்து நோபல் உலக சாதனை செய்துள்ளனர்.

தயநிதா சக்ராசனம், நடராஜாசனம், ஹனுமாசனம் உட்பட ஐம்பது ஆசனங்களை ஏழு நிமிடத்தில் செய்து முடித்தும், அஷ்வந்த் தொடர்ந்து அரை மணி நேரம் பூமாசனம் செய்தும் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இருவருக்கும் நோபல் உலக சாதனை புரிந்த சான்றிதழை டாக்டர் கலையரசன் வழங்கினார்.

இந்நிலையில் இதற்கான துவக்க விழாவில்  கிராமிய புதல்வன் அகாடமிக்கு வருகை தந்த கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் சாதனை புரிந்த இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து அஷ்வந்த், தயநிதா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பெற்றோர்கள் மற்றும் யோகா ஆசிரியையுடன் ஊக்கத்துடன் மேலும் பல சாதனைகளை யோகாவில் செய்ய உள்ளதாக தெரிவித்தனர். ஏழு வயதில் ஆறு மாதங்கள் மட்டுமே யோகா பயிற்சி பெற்று உலக சாதனை புரிந்த இருவரையும் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.