பொங்கலன்று ரேஷன் கார்டுக்கு புதுப்பானை, அடுப்பு வழங்க மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை

பொங்கல் தினத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு புதிய மண் பானை மற்றும் மண் அடுப்பை தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் மருதாசலம் பேசுகையில், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு வருகிறது.

பொங்கல் திருநாளில் தமிழக அரசு சார்பில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தலால் எங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, ஒரு வேளை உணவுக்கு கூட மக்கள் கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கோவையில் 10 ஆயிரம் பேர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். எனவே எங்கள் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும்.

மேலும், தற்போது நலவாரியத்தில் ரூ.2 ஆயிரம் என்று வழங்கப்படும் உதவித் தொகையை ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி கொடுக்க வேண்டும் மற்றும் அரிசி வழங்க வேண்டும் என்று கூறினார்.