நாளை திறந்த வெளியில் கிராம சபைக் கூட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இந்த கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கொரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்குகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மேலும், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

கிராம சபைக் கூட்டமானது திறந்த வெளியிலும் மற்றும் நோய் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளிலும் நடத்தப்பட உள்ளது. இதில் கொரோனா தொடர்பான அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல் தொடர்பான அறிகுறிகள் இருப்பவர்கள் மிகவும் வயதானவர்கள் மற்றும் கைக்குழந்தைகள், காய்ச்சல் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் இதனை தவிர்த்து கொள்ளவும்.

மேலும், கிராம ஊராட்சிப் பகுதிகளில் உள்ள பொது மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து தங்கள் ஊராட்சியில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என கோவை மாவட்ட ஆட்சியர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.