நாளைக்கு செய்யலாம் என நினைப்பது சரியா?

ஒவ்வொரு நாளும் நாளை முதல் வாக்கிங் போகலாம் என நினைத்துக்கொண்டு தூங்குபவர்கள் யாரும் வாக்கிங் செல்வதே இல்லை! அப்படியொருவர் சத்குருவிடம் தனது நிலை குறித்து கூறி, அதற்கான தீர்வையும் கேட்கிறார். அதற்கு சத்குருவின் பதில் இங்கே!

பேய்களுக்கான “நாளைக்கு வா!”

கர்நாடகத்தில் கிராமங்களில் ஒரு மூட நம்பிக்கை உண்டு. சூரியன் அஸ்தமித்த பிறகு, அந்தப் பகுதியில் இருக்கும் பேய்களும், பிசாசுகளும் வீடுகளுக்குள் நுழையப் பார்க்குமாம். இந்தப் பேய்களை விரட்டியடிக்கப் பார்த்தால், அவற்றுக்குக் கோபம் வந்து, படுமோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்று அந்த மக்களுக்குப் பயம். அதனால், அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்வார்கள். பேய்களுக்கு ரத்தச் சிவப்பு நிறம் பிடிக்கும் என்பதால், அந்தச் சிவப்பு வண்ணத்தில் ஒவ்வொரு வீட்டுக் கதவிலும் ‘நாளைக்கு வா’ என்று எழுதி வைத்து விடுவார்கள். கேட்டால், ‘பேய்கள், பிசாசுகள் எப்போது வந்தாலும், வாசலிலேயே இந்த அறிவிப்பைப் பார்த்துவிட்டுத் திரும்பி விடும்’ என்பார்கள்.

உங்களுக்குள் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் புகுந்து கொள்ளப் பார்க்கும் கோபம், வெறுப்பு, பொறாமை, சோம்பல் போன்ற பிசாசுகளுக்கு ‘நாளைக்கு வா’ என்று சொல்லி வைத்தீர்கள் என்றால், அர்த்தமிருக்கிறது. ஆனால், உங்கள் வாழ்க்கைக்கு முக்கியம் என்று நீங்கள் நினைப்பதற்கெல்லாம் இந்தத் தப்பான மந்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டீர்களே?

இன்று என்றாலே, இப்போது என்றாலோ அதை உடனே சந்திக்க வேண்டிய அவசியம் வருகிறது. எந்த தினத்திலும், ‘நாளை’ என்பது வராத நாளாகத்தானே இருக்கிறது’ வெற்றியையும், ஆனந்தத்தையும் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையானதையும் ‘நாளைக்கு வா’ என்று சொன்னால், ‘ஆளை விடப்பா!’ என அவை சந்தோஷமாக ஒதுங்கிப் போய்விடும். எச்சரிக்கையாக இருங்கள்.

“நாளைக்கு”  சோம்பேறிகளின் தாரக மந்திரம்.

‘நாளையிலிருந்து’ என்பது மனதுக்குள் பேயாடுகிற மிக ஆழமான ஒரு தந்திரம். உங்கள் வாழ்க்கையில் பல கட்டங்களில் இந்த மாயத்  தந்திரத்துக்கு நீங்களே இடம் கொடுத்து விட்டீர்கள். நீங்கள் விரும்பியதைச் செய்யாமல் சோம்பி உட்கார்ந்து இருந்தால், ‘அதென்ன சோம்பலாய் உட்கார்ந்திருக்கிறாய்? எழுந்திரு!’ என்று உங்கள் மனமே குற்ற உணர்ச்சியில் உங்களை அதட்டும்.

‘பொறுப்பில்லாமல் இருக்கிறேன்’ என்று ஒப்புக்கொள்ள உங்கள் அகங்காரம் ஒருபோதும் இடம் கொடுக்காது. ‘நான் ஒன்றும் சோம்பேறி இல்லை. நாளைக்கு ஆரம்பிப்பதாக இருக்கிறேன்’ என்று அகங்காரம் மனதை சமாதானம் செய்து ஏமாற்றிவிடும்.

செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருப்பவர்களுக்கு, நாளைக்கு என்பதுதான் எப்போதுமே நல்ல நாள். நாளைக்கு என்று சொல்லிவிட்டால், பொறுப்பு முடிந்துவிட்டது. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், நாளை என்பதை நாம் சந்திக்கப் போவதே இல்லை. நாளை என்பது நம் வாழ்வில் உணர்வுப் பூர்வமாக வரப் போவதே இல்லை. அது ‘இன்று’ என்றாகும்போதுதான் நம்மால் அதை எதிர்கொள்ள முடியும்.

இந்த நிலையை எப்படி மாற்றுவது?

வீட்டு வேலையானாலும் சரி, ஒரு தொழில் நடத்துவதானாலும் சரி, நம் ஆரோக்கியத்துக்கான உடற்பயிற்சியானாலும் சரி.. அதற்குச் சாதகமான சூழ்நிலையை முதலில் உருவாக்க வேண்டும். இரவு பத்து மணிக்கு மேல் வயிறு அடைக்கத் தோசை சாப்பிட்டீர்கள்.

காலையில் ஆறு, ஏழு மணிக்கு யோகா செய்ய வேண்டும். வாக் போக வேண்டும் என்றால், உங்கள் உடம்பு எப்படி ஒத்துழைக்கும்? காலை நான்கு மணிக்கே விழிப்பு வருமளவு குறைவாகச் சாப்பிட்டுப் பாருங்கள், தானாக விழிப்பு வரும். யோகா பண்ணலாம், வாக் போகலாம் என்று உடல் சொல்லும். சில நாட்கள் தொடர்ந்து செய்தால், பலன் தெரியும்.

அதன்பின் உங்களுக்கு யாரும் எடுத்துச் சொல்லத் தேவையிருக்காது. மனதில் ஓர் உறுதி, வெளியில் சரியான சூழ்நிலை இரண்டையும் உருவாக்கினால், ஆசைப்பட்டதைத் தள்ளிப்போடாமல் செய்து முடிக்கும் பலம் நமக்குத் தானாக வந்துவிடும்.