திரையுலக பின்னணி பாடகர்கள் உலகில் மிகப்பெரும் உச்சம் பெற்ற எஸ்.பி.பி நேற்று உயிரிழந்தார். இவரது மறைவிற்கு நன்னெறிக் கழகத்தின் தலைவர் இயகோகா சுப்பிரமணியம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கை என்னும் இளைய கன்னி, ஆயிரம் நிலவுகளை வா என அழைத்து பொட்டு வைத்த முகங்கள் எல்லாம் அவனது புதுக்குரலால் கட்டுண்டு மயங்கியபோது, தமிழ்த்திரை இசையில் ஒரு புது அத்தியாயம் இளையராஜா வரவால் தொடங்கியது.
நான் டி.எம்.எஸ், சீர்காழி, ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீநிவாஸ் காலத்தவன். ஆனால் எம் கேடி பாகவதர், பி.யு.சின்னப்பா, டி.ஆர். மகாலிங்கம், சி.எஸ்.ஜெயராமன் குரல்களிலும் தவழும் பாக்கியம் பெற்றவன். கண்டசாலாவை மறக்கமுடியுமா, எழுபதுகளின் இளமைக்காலங்களில் இந்தியில் ரபியும் முகேஷனம், கிஷோர் குமாரும், மகேந்திர கபூரும் கலக்கிய தருணங்கள் ஜேசுதாஸ் என்ற இன்னொரு இசைமேதை எல்லா மொழிகளிலும் பாட ஆரம்பித்த பரவச நாட்கள் அவை.
ஆனால், எல்லா மொழிகளிலும், எல்லா பாடகியருடனும், இசைமேதைகளுடனும் எஸ்.பி.பி-ஐப் போல பாடல் பெற்ற பாடகன் யாரும் இல்லை. ஒவ்வொரு இந்தியன் இல்லத்திலும், அவனது குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
ஒருமுறை வேட்டைக்காரன் புதூர் முத்துமாணிக்கம் அவர்களுடன் இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் இல்லத்துக்குச் சென்று அவரை சந்தித்தோம், நடிகர் திலகத்தின் மீது அளவற்ற பாசம் வைத்துள்ள அந்தக் குயில் உரையாடலின் இடையே, எஸ்.பி.பி-ஐப் பற்றி மிகவும் உயர்வாகச் சொல்லி, அவருடன் பாடக்கிடைத்த சந்தர்ப்பத்தைப் பெருமையாக சொன்னார். தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்து கண்ணீர் சிந்த அவனது ஊர்வலத்தை இறுதியாகப் பார்க்கும்போது, இனியவன் தேவலோகத்தில் கந்தர்வர்களுக்காகப் பாடுவான், என்று ஒரு கற்பனை தோன்றுகிறது. செவிக்குணவளித்த செம்மல்! சென்றுவா!
– இயகோகா சுப்பிரமணியம்