எஸ்.பி.பியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர்

கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார்.  அதனைத்தொடர்ந்து 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. செப்டம்பர் மாதத்தின் முதல்வாரத்திலிருந்தே எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மற்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எஸ்.பி.பியின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வந்தநிலையில், நேற்றுமுதல் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

நேற்று, மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பில் அவரது உடல்நிலையில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று மதியம் 1.04 நிமிடங்களுக்கு உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

எஸ்.பி.பி மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், ‘தமிழக மக்களை தேனினும் இனிமையான தனது குரலால் கவர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகரும், திரைப்பட நடிகரும் எஸ்.பி.பி என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்ரமணியன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.